Header Ads

ad

மாஸ் ஓப்பனிங் வசூல் குவித்த 'இரும்புத்திரை'

விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த 'இரும்புத்திரை' திரைப்படம் ரசிகர்களிடம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று தியேட்டர்களில் வசூல் அள்ளி வருகிறது. 

டிஜிட்டல் இந்தியா திட்டங்கள், ஸ்மார்ட் போன், கேஷ்லெஸ் எகானமி ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லும் விதமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆதார், டிஜிட்டல் இந்தியா திட்டங்களைப் பற்றி தவறான கருத்தைப் பரப்பியிருப்பதாக பா.ஜ.க-வினர் சென்னையில் காசி தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு தள்ளுபடியானதும் குறிப்பிடத்தக்கது. 

இதுவரை வெளிவந்த விஷாலின் படங்களிலேயே இதுதான் அதிகபட்ச ஓப்பனிங் வசூல் செய்த படம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படம் சென்னையில் மட்டுமே முதல் நாளில் 38 லட்சத்தை கடந்து வசூல் செய்தது. மூன்று நாட்களில் சென்னையில் மட்டுமே ரூ. 1.19 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 

'இரும்புத்திரை' படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வீக்கெண்ட் நாட்களில் மட்டும் தமிழகம் முழுக்க ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஷால் படங்களில் இதுதான் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கொடுத்திருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் ரூ. 62 லட்சமும், கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் நடித்துள்ள 'நடிகையர் திலகம்' - 'மகாநதி' படம் ரூ. 54 லட்சமும் வசூல் செய்துள்ளது. ஏற்கெனவே வெளிவந்து இன்னும் சில தியேட்டர்களில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் 'மெர்க்குரி' படம் சென்னையில் இதுவரை 2.08 கோடி ரூபாயும், 'தியா' படம் சென்னையில் 1.09 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கின்றன.